Thursday, February 6, 2025

DHARUL HIKAM-4

 

Dharul hikam- 4

 அந்திமப் பூ

 

அந்திமப் பூவே

அந்திமப் பூவே,

 

அவள் ஒருநாள்

உன்னிடம் வரக்கூடும்

 

அப்போது கூறு,

அடியில் அடங்கியிருப்பது

ஆயிரம் கவிதைகள்

அவளுக்காக எழுதிய

அந்த அப்பாவிதான் என்று..

 

மண்ணறைக்கு மேலே

மலர்ந்துள்ள இந்த

மலர்

மண்ணாகிப் போனவனின்

மனம்தான் என்றும்,

 

நீ

கழற்றி எறிந்தவன்

உள்ளிருந்து இயற்றிய

கவிதை இதுவென்றும்

 

பூமிக்கு மேலே

பூத்திருக்கும் இந்தப் பூ

அவன்,

அவளுக்காக

காத்திருந்த போது

யாத்திருந்த பா என்றும் கூறு..

 

அவள் ஒருநாள்

உன்னிடம் வரக்கூடும்

0

 

 

கவிதைப் பரிசு

 

கண்கள் நிறையக்

கனவுகள் காய்க்கின்றாய்

 

மந்திர  மொழியால்

மனதை உழுகின்றாய்

 

புன்னகையால் - தினமும்,

பூக்களை

விதைக்கின்றாய்

 

உனக்காக,

என்ன தருவேன்...

 

கண்ணே

கைகள் நிறையக்

கவிதைகள் அள்ளித் தருகிறேன்.

O

 

இடி விழுந்த கதை

 

எதற்குச் சொன்னாய்

அந்தக் கதையை...

 

மூச்சு முட்டி

விழிகள் வெறிச்சிட்டு

விண்ணைப் பார்க்கவும்

 

கவிதைகளுக்கு

கபன் இட்டுப் போர்த்தவும்

 

தொண்டைக்குள்

கபுருக் குழி தோண்டவும்

 

நெஞ்சம் முழுவதும்

மஞ்சிப் பலகை மூடவும்

 

அன்பை இறக்கி

அடக்கம் செய்து,

எனக்கி நானே

தல்க்கீன் ஓதவுமா...

 

அந்தக் கதையைச் சொன்னாய்

அன்பே..

O

தனிமைத் தீ

 

வெறிச்சோடிக் கிடக்கிறது

என் வானம்

 

கானம் இசைத்த காற்றைக்

காணவில்லை என்று..

 

மேகம் சுமந்து பொழிந்த

கவிதை மழை

ஓய்ந்து போனதென்று..

சாய்ந்தமருது முழுவதும்

காய்ந்து  போய் கிடக்கிறது..

 

முற்றும் என்று நீ

முகம் மறைத்ததில், என்

முற்றம் முழுவதும்

வற்றிப் போனது..

 

மோகனம் பாடிய குரல்

இன்று

கானகம் ஏகியதால்

வானகம் எல்லாம், வீணே

வெறிச்சோடிக் கிடக்கிறது.

 

தனிமைத் தீ

என்னைத்

தின்று கொண்டிருக்கிறது.

O

கவிதைத்தானம்

 

என்

முற்றம் முழுவதும்

இறைத்திருக்கிறேன்

என் கவிதைகளை

 

சுற்றம் சூழ வருக

குருவிகளே..

சற்றும் விடாது

கொத்திச் செல்லுங்கள்

 

குற்றம் சுமத்தி

என்னைப்

பற்றறுத்துப் பிரிந்தவளுக்குப்

பாடல் இனி இல்லை.

 

காலக்

கூற்றவன் வந்தென்

கழுத்தைப் பற்றும் வரை

எழுதியவற்றை எறிவேன்

முற்றம் முழுக்க...

 

ஓ.. சிட்டுக் குருவிகளே,

வந்துங்கள்

அலகு நிறைய

அள்ளிச் செல்லுங்கள்..

 

அடுத்த முறை

வந்தால்

எனக்காக நீங்கள்

அஞ்சலிக்கவும் கூடும்.

 

இப்போதே,

இற்றை வரை நான்

இயற்றியவற்றைச்

 

சுற்றி எறிகிறேன்

பற்றிச் செல்க

என் சிட்டுக்களே..

O

ஆகாயம்.. நீ

 

எங்கிருந்து பார்த்தாலும்

தெரியும் ஆகாயம் நீ

 

நீயும் நானும் பார்க்கும்

நிலவும் நட்சத்திரமும்

வானவில்லும் ஒன்றே

 

எனினும்

இங்கிருந்து

விடை பெறுவதற்கு முன்பு

 

ஒரு கைகுலுக்கல்

ஒரு பார்வை

ஒரு உரையாடல்

ஒரு கோப்பை தேநீரோடு

உன்னை

காதலிக்கவே விரும்புகிறேன்..

O

மனமஹால்

அழகிய வீடு அது

அன்றெனக்குச்

சொந்தமாயிருந்தது...

 

பசுமையான அதன் முற்றத்தில்

படுத்திருந்தேன்

குளிர்ச்சியான அந்தக்

கூரையின் கீழிருந்தேன்

 

தடங்கல் ஏதுமில்லை

தனித்திருந்தேன்

 

வசித்திருந்த காலமெல்லாம்

விசித்திரம்தான்

 

உன் மனம் என்னும் அந்த

விசித்திர  வீடு

0

 

 சொல்லித்'தீரா'க் காதல்

 

நமது காதல்

எத்தனை அழகானது

 

சிறகடிக்கும் ஒரு

வண்ணத்துப் பூச்சியின்

இறக்கை போல...

 

சிலீரென்று

முகத்தில் விழும்

ஒரு பனித்துளி போல..

 

ஒரு குழந்தையின்

மழலை மொழி போல..

 

காட்டு மூங்கிலின்

இசை போல

 

ஆஹா

நமது காதல்

எத்தனை அழகானது

0

 

பூக்களை அனுப்புகிறேன்

உன்னிடம்!

புன்னகை பழக்கு

அதற்கு

O

தென்றலையும் அனுப்புகிறேன்

இதயத்தைத் திருடும்

விடயத்தை அதற்குச்

சொல்லிக்கொடு..

O

கவிதை ஒன்றும்

அனுப்புகிறேன்

உன் பெயரைத்

தலைப்பு வைத்துத்  திருப்பு

0

கனவும் முகம்

 

அதிகாலையில்

அலைபேசிக்குள் வந்த

அழகிய அதிசயம்

உன் முகம்

 

விடியலில்

விழித்த விடிவெள்ளி

உன் விழிகள்..

 

குளிருக்குள் கண்ட

குற்றால அருவி

உன் கூந்தல்..

 

செல்போனுக்குள்

கேட்ட ஒரு

சொல் போதும் எனக்கு

நான் உயிர் பெற...

 

 

மாதவம்

 

கவிதைகள் வற்றிய

குளத்தில்

யாருக்காக தவமிருக்கிறேன்..

 

பறவைகள் பறக்காத வானத்தில்

ஏனோ வலை  விரிக்கின்றேன்

 

துண்டு நிலாவை முறித்து

வானம் முழுவதும்

வரைந்த வசனங்கள் வாடுகின்றன

வரவில்லை நீ.

 

என்றாவது வந்து

வாசிப்பாய் என்று

கவிதையைப் போர்த்திக்

கண்ணுறங்குகின்றேன்

 

வா..வா

வந்து

என்னைக் கொத்திக் கொண்டு செல்..

0

 

 

அகத் தீ

 

கொழுத்திப் போட்டது

கொழுந்து விட்டெரிகிறது

 

தீபமாய் எரிந்தது,

தீப்பற்றிக் கொண்டது

சுடராய்த் தொடங்கியது

சூழ்ந்து பற்றிப்

பரவி விட்டது.

 

சில காலம்

நீறு பூத்திருந்தது

இன்று

நெருப்பாய் எரிகிறது

 

காழ்ந்து எரிந்து,  மனக்

காடு முழுவதும்

கருகி விட்டது

 

தணியாமல்,

கனன்று கொண்டே இருக்கிறது,

 

உன்னைப்,'பற்றி'

என்னில் பற்றிய

 

நினைவுப் பெரு நெருப்பு.

0